சனி, 4 ஆகஸ்ட், 2012

நீண்ட இரவு

                                                  நீண்ட இரவு
ஒரியா மொழி மூலம்: சந்திரசேகர் ரத்
இந்தியில்: சுஜாதா சிவேன்
தமிழில்: நாணற்காடன்
             அன்று காலையிலேயே அவனைப் பார்த்தேன். அவனது முகம் வியர்வையாலும், கண்ணீராலும் நனைந்திருந்தது. கண்களைச் சுற்றிலும் கருவளையம் பூத்திருந்தது. காவித்துண்டைப் போர்த்திக் கொண்டிருந்தான். உடலெங்கும் அழுக்கும், மண்ணும் அப்பியிருந்தன. வயிறும், முதுகும் ஒன்றாக ஒட்டியிருந்தன. அவனது வீட்டுக்குள்ளிருந்து அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
                             யாரோ ஒருவர் குழந்தையைத் துணியில் சுற்றி தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்தபடி மேலும் இரண்டு பேர் வந்தனர். அவன் சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். 
                             அவன் என்னைப் பார்த்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் அவனிடம் போய் எதுவும் விசாரிக்கும் துணிச்சல் எனக்கு ஏற்படவில்லை.
                          காலை நடைப்பயிற்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். நான் தினமும் இந்த நேரத்தில் இதே பாதையில் தான் திரும்பி வருவேன். பெரும்பாலான நாட்களில் அவனைச் சந்தித்ததில்லை. ஆனால் இன்று இப்படியொரு சூழ்நிலையில் அவனைச் சந்திப்பேனென நினைக்கவில்லை. ஏனெனில், ராஜூ நேற்று மாலை தான் என்னை வண்டியில் கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றான்.
                              கேந்துஜரிலிருந்து ஜோடா வரைக்கும் என்னை அழைத்துப் போய்விட்டு மறுபடியும் அங்கிருந்து திரும்ப அழைத்துவந்தான். அங்கிருந்து திரும்பும்போது வண்டியின் மீட்டரை நிறுத்தி வைத்தான். முதலாளிக்குத் தெரியாமல் இப்படி அவன் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதுண்டு. அதுபற்றி நான் எதுவும் கேட்க மாட்டேன் என்பது அவனுக்கும் தெரியும். ஏனென்றால் வண்டிக்கு வாடகைக் கொடுக்கமாட்டேன் நான். கொடுத்தாலும் வாங்க மாட்டான். வண்டியில் ஏறும் மற்ற பயணிகளின் பணத்தில் சரி செய்துகொள்வான் அவன். ராஜூ வாடகைக் கார் (டேக்ஸி) ஓட்டுபவன். வெள்ளை அம்பாஸடர் டீசல் காரை முறைப்பட ஓட்டத்தெரிந்தவன். நான் எங்கு போக வேண்டுமென்றாலும் அவனைத் தான் அழைப்பேன்.
                           சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் அவன். அவனது வீட்டிற்குள்ளிருந்து அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு போய்க்கொண்டிருந்தனர் அவர்கள். நான் அமைதியாக அங்கிருந்து கிளம்பினேன். 
                                அன்று முழுவதும் என் மனத்திலும், மூளையிலும் ராஜீதான் நிழலாகப் படிந்து கிடந்தான். எங்கு பார்த்தாலும் வெற்றுடம்போடு சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த ராஜீவின் உருவம் தான் தென்பட்டது. அமைதியற்றுக் கிடந்தேன் நான். துக்கத்தில் கிடந்த ராஜுவுக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாமல் திரும்பி வந்துவிட்ட என்னை நினைத்து நொந்துகொண்டேன்.
                              ராஜுவிற்கு நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். அவனது மகன் ஏதோ படித்திருக்கிறான். அவனை ஏதாவதொரு வேலையில் சேர்த்துவிடச்சொல்லி ராஜீ என்னிடம் கேட்டிருந்தான். அவனுக்கு மேலும் படிக்க விரும்பவில்லையாம். ராஜீவுக்கும் அவனை மேற்கொண்டுப் படிக்க வைக்க வசதியில்லை.
                          வழியில் சந்தையைப் பார்த்ததும் ராஜீ எனக்காக மலிவு விலையில் காய்கறிகள் வாங்கிக்கொடுத்தான். தனக்காக ஒரு பூசணிக்காயும் வாங்கிக்கொண்டான். பெரிய குடும்பம் அவனுடையது. உருளைக்கிழங்கு பூசணிக்காய் வாங்குவதற்கே அதிகச் செலவாகிறது எனச் சொன்னான் ராஜீ. 
                         மேலும் அவன் தன் கடைசிப் பையனுக்கு உடம்பு சரியில்லை எனவும் சொன்னான். வண்டி ஓட்ட வராவிட்டால் ஏது பணம்? வீட்டிலேயேயிருந்து மகனைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. 
                                 ஜோடாவுக்குச் செல்லும்போது எதுவும் பேசாமல்தான் வண்டி ஓட்டினான். குடும்பம், மகன்கள், பசி, தாகம், நோய் எனத் தீராத தன் வாழ்வின் துயரங்களையே நினைத்து ஆழ்ந்து கிடந்தான் அவன். நான் ஏதேனும் கேட்டால் சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறான்.
                          அவன் மனசு சரியில்லாமலிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டேன். துக்கத்துக்குள்ளேயே விட்டுவிட்டு வருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
                               ஜோடாவுக்குப் போய்ச் சேர்ந்ததும் நன்றாகச் சாப்பிட்டோம். அதன்பிறகுதான் அவன் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினான். வீடு திரும்பப்போகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவனது முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தென்பட்டதோ என்னவோ?
                                 நகர எல்லையைத் தொடும்போது இருட்டாகிவிட்டது. என் வீட்டுக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு காய்கறிகளை எடுத்துக்கொடுத்தான். வணக்கம் சொல்லி விடைபெற அவசரம் காட்டினான். நானும் ஒரு நொடி கூட அவனைத் தடுத்து நிறுத்த விரும்பாமல் உடனே அனுப்பி வைத்தேன்.

                                  ஆனால் ஓர் இரவுக்குள் என்ன இதெல்லாம்? எவ்வளவு பரிதாபத்துக்குரியவன் இந்த ராஜீ. அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் இந்தப் போர் ஆரம்பித்துவிட்டது போலும். டாக்டர், மருந்து, ஊசி என இரவு முழுக்க துக்கமும், வலியும் அடுக்கடுக்காய்க் குவிந்திருக்கும். விடிந்ததும் சின்னக் கூண்டைத் திறந்துகொண்டு பறவை பறந்துவிட்டது போலிருக்கிறது.                      
                     ஐந்து மணி ஆனதுமே நான் ராஜீவின் வீட்டிற்கு முன் போய்ச் சேர்ந்தேன். பேண்ட் சர்ட் அணிந்துகொண்டு காவித்துண்டை தோளில் போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினான் ராஜீ. இந்த மோசமான நாளில்கூட எங்கு கிளம்பிவிட்டான் இவன்? உயரமான அலைகளில் ஏறி இறங்கும் படகினைப்போல் அவனது கால்கள் தடுமாறிக்கொண்டிருந்தன. குடித்திருக்கிறான் போலும். உள்ளே எரிகின்ற நெருப்பை, குடித்து அணைக்க நினைக்கிறான்.
                                  என்னைப் பார்த்ததும் திகைத்துப் போய் வணக்கம் செலுத்தி சிரிக்க முயன்றான்.  “எங்கேயாவது போக வேண்டுமா ஐயா” என்றான். 
                              ”இந்த நிலைமையில் கிளம்பி வர முடியுமா உன்னால்” என்றேன். 
                             “ ஒண்ணும் பிரச்சினை இல்லை ஐயா.. ஸ்டியரிங் பிடித்து உட்கார்ந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்றான் அவன்.
                                    “ அதற்கில்லை.. இன்று உன்னுடைய மகன்.............” என்று இழுத்தேன் நான். 
                                   “ ஓ.. அதையே நினைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது ஐயா.. அவனையே நினைத்து உட்கார்ந்துகொண்டிருந்தால் மீதி இருப்பவர்கள் சாப்பிட வேண்டாமா? துக்கத்தை அனுபவிக்கக் கூட எங்களைப் போன்ற மனிதர்களுக்கு நேரமிருக்கிறதா என்ன? நடந்தது நடந்துவிட்டது. முறைப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லையென்றால் அவனும் வளர்ந்து பெரியவனாகி வாழ்ந்திருப்பான். இரண்டரை வயசுப் பையன். அவன் பேசுவதைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். அழகான முகம் அவனுக்கு” சொல்லிவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டான் அவன். ஆழ்ந்த கனவும், ஏமாற்றமும் ராஜீவின் கண்களில் நிரம்பி வழிந்தன.
                                   மறுபடியும் என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். “சரிங்கய்யா.. எங்க போகணும்.?” என்றான்.
                                     “ இல்லையில்லை.. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றேன் நான்.
                            அவனது உதடுகள் நடுங்கின. கண்களின் ஓரங்கள் சுருங்கிக் கொண்டன. உள்ளிருந்த அழுகையை மறைத்து வைக்க முடியவில்லை அவனால்.
                             அப்படியே நடக்கத் தொடங்கினோம் இருவரும்.
                             “ நீங்கள் ஸ்கூட்டர் கொண்டு வரவில்லையா?”
              “ கொண்டு வந்தேன். அதன் விளக்கைச் சரி செய்வதற்காக கஜவாவிடம் விட்டிருக்கிறேன்”
                      “ என்னிடம் கொண்டு வந்திருக்கலாமில்லையா? நான் சரி செய்து கொடுத்திருப்பேனே? கஜவாவுக்கு என்ன தெரியும்?”
                            “ நேற்று என்னை ஜோடாவுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் உன் மகன் இறந்திருக்க மாட்டான். நீ இங்கேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரவு முழுக்க என்ன செய்து கொண்டிருந்தாய். ஏன் எனக்குத் தகவல் தரவில்லை?”
                           “ என்ன செய்வது ஐயா..நான் விடிந்துதான் வீட்டிற்குச் சென்றேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.”
                            நான் கோபத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டேன். “ நீ எதுக்கும் லாயக்கில்லாதவன். வீட்டுல பையன் உடம்பு சரியில்லாம கிடக்கிறான். நீ சாராயக்கடைக்குப் போயிட்டயா? உன் முதலாளிக்குத் தெரியாம சம்பாதிக்கிறது இப்படி குடிச்சி அழிக்கத்தானா?” 
                         அவன் என் கோபத்தைச் சகித்துக்கொண்டு, “ ஐயா உண்மையில் என்ன நடந்தது என்று கேளுங்கள்.”என்றான்.
                            “ என்ன கேட்கட்டும்..உளறு வாயனே.. ராத்திரி முழுக்க குடிச்சிட்டு அங்கேயே விழுந்திட்டயா?”
                                    “ இல்லைங்கய்யா.. நேற்று இரவு நடந்ததைப்பற்றி எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது உங்களுக்கு?”
                             அதே கடுமையான குரலில், “ அப்படி என்ன தான் நடந்தது” என்று கேட்டேன்.
                              தலை குனிந்தவாறே பேசத் தொடங்கினான். 
                             “ நான் அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாததால்தான் இறந்துவிட்டான். உங்களை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பும்போது அவனுக்கு திராட்சை, ஆப்பிள் கொஞ்சம் வாங்கலாமெனக் கடைவீதிக்குப் போனேன். அவன் முகம் என் கண்ணுக்குள்ளேயே இருந்தது. கீழ்வீதியில் போய்க்கொண்டிருந்தேன். திடீரென பிரேக் போட்டேன். ஒரு நெருப்பு உருண்டை என் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை உருண்டோடியது. ஏழெட்டு வயசுச் சிறுமி ஒருத்தி மயிரிழையில் உயிர் தப்பினாள். இல்லாவிட்டால் வண்டி அவள் மேல் ஏறியிருக்கும். பிறகு அவள் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் காதைப் பிடித்துத் திருகி அவளது அப்பா அம்மாவிடம் கொண்டு போய் விடவேண்டுமென்று கோபத்தோடு வண்டியை விட்டு இறங்கினேன்.
                                   “ கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ரெண்டு திட்டு திட்டிவிட்டுப் போக வேண்டியது தானே,, உனக்கெதுக்கு இந்த நினைப்பு” என்றேன் நான்.
                                நான் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் மறுபடியும் பேசினான் ராஜீ. “ நான் கீழே இறங்கி..ஏ மடச்சாம்பிராணி! என்று கூப்பிட்டேன். அவள் மின்கம்பத்தருகே பயந்தவாறு நின்று கொண்டாள். நான் கோபத்தோடு அவளை நெருங்கும்போது தான் கவனித்தேன். அவள் அழுது கொண்டிருந்தாள். என்னைப்பார்த்து, என் அம்மா சாகக் கிடக்கிறாள்..என் வீட்டில் யாருமில்லை.. என்று சொல்லியபடி அழத்தொடங்கினாள்.
                          ஓங்கிய கையை நிறுத்திவிட்டு அப்படியே நின்றுவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது ஒரு குள்ளமான கிழவி ஒருத்தி வந்தாள். பார்க்க என் அம்மாவைப் போலவே இருந்தாள். அவள் அந்தச் சிறுமியைப் பார்த்து, “ பதுவா தானே நீ..” என்றபடி என்னைப் பார்த்து “ ஏப்பா, கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாது..சரி சரி வா போகலாம்” என்றாள். அவள் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவர்களின் வீட்டைப் போய்ப் பார்த்தால் அதுவும் ஏழைமைத் தாண்டவமாடும் வீடு. பதுவாவின் அம்மா சுவரில் சாய்ந்தபடி கட்டில் மேல் உட்கார்ந்திருந்தாள். பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். நீர் நிரம்பியக் குடத்தைப்போல தளும்பிக்கொண்டிருக்கும் கர்ப்பவதி அவள். 
                                அந்தக் கிழவி அவளது முகத்தில் நீர் தெளித்து தன் முந்தானையில் துடைத்துவிட்டாள்.
                                “ உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார். வா போகலாம். நானும் உன்னோட வரேன். பதுவா..நீ தம்பியைப் பார்த்துகிட்டு இங்கேயே இரு. உன் அப்பா வந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வை. மேல கடவுள் இருக்காரு. நம்மள பார்த்துக்குவாரு. பதுவா.. போய் விசியாவோட அம்மாவைக் கூட்டிட்டு வா. நான் தனியா இவளைக் கூட்டிட்டுப் போக முடியாது.” என்றாள் அந்தக் கிழவி.
                           என்னால் எதுவும் பேச முடியவில்லை. கடவுளுக்குத் தெரியும். கஷ்ட காலத்துக்கு யாரோட யார சேர்த்து வைக்கணும்னு. 
                        அந்தக் கிழவியும், விசியாவோட அம்மாவும் எப்படியோ அவளைக் காரில் ஏற்றிவிட்டார்கள். பக்கத்தில் ஒரு துணி மூட்டையை வைத்துக்கொண்டு கிழவி அமர்ந்துகொண்டாள். விசியாவோட அம்மா அந்தப் பக்கமாக உட்கார்ந்துகொண்டாள். “ சீக்கிரம் போப்பா” என்றாள் கிழவி. ஆஸ்பிட்டலுக்குப் போய்ச் சேரும்போது மணி எட்டரை ஆகிவிட்டது.
                           எல்லோரையும் இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிய போது அந்தக் கிழவி, “ ஆம்பளைங்க யாராச்சும் இருந்தா பரவால. கொஞ்சம் தைரியமா இருக்கும். ஏப்பா..இவளை எங்கே கொண்டு போகனும்னு கொஞ்சம் கேட்டுட்டு வாயேன்” என்றாள்.
                         எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அந்தக் கிழவியின் நம்பிக்கையை அழிக்க மனம் வரவில்லை. வேறு வழியில்லை. டாக்டர்களையும், ஆஸ்பத்திரிப் பற்றியும் தான் உங்களுக்குத் தெரியுமே. காரில் வரும் நோயாளிகளைத்தான் அவர்கள் நன்றாக கவனிப்பார்களே! டாக்டரும், நர்சும் அவளை உள்ளே அழைத்து வரச் சொன்னார்கள். 
                      கிழவியும், விசியாவோட அம்மாவும் உதவி செய்ய நான் அவளை செக்கப்புக்கு அழைத்துப்போனேன்.
                             டாக்டர் பார்த்ததுமே, “ உடனே டெலிவரி ஆகிவிடும். உடனே ஊசி சலைன் எல்லாம் தேவைப்படும். ஆஸ்பிடல்ல இப்ப எல்லாம் தீர்ந்துவிட்டன. இந்த சீட்டில் இருப்பதை உடனே போய் வாங்கி வாங்க” என்றார்.
                        சொல்லிவிட்டு டாக்டரும், நர்சும் தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்தக் கிழவியோ, “ போப்பா.. என்ன பார்த்துக்கிட்டே நிற்கிற..சீக்கிரம் போய் வாங்கிட்டு வா..” என்றாள். விசித்திரமாக இருந்தது. அந்தச் சீட்டைக் கிழித்து அவர்கள் முகத்தில் வீசிவிட்டு வந்திருக்க முடியும். வழியில் பார்த்த என்னிடம் இவ்வளவு அதிகாரமா? பணம் எங்கிருந்து வரும்?
                            அதே சமயம் பதுவாவோட அம்மா என்னை நோக்கிப் பார்வையைப் பறக்க விட்டாள்.  “ என் அம்மா சாகக் கிடக்கிறாள்” என பதுவா அழுதது வேறு ஞாபகத்தில் வந்தது.
                           உடனே வண்டியைக் கிளப்பிக்கொண்டு கிளம்பினேன். இருநூறு ரூபாய்க்கும் அதிகமாக செலவானது. ஊசி மருந்து வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். உள்ளே பிரசவம் நடந்து கொண்டிருந்தது. விட்டு விட்டு எப்படிச் செல்வது? வேறு ஏதேனும் தேவைப்பட்டால்? இங்கு வேறு யார் இருக்கிறார்கள்?
                         நான் வெற்றிலை அதக்கினேன். பீடி புகைத்தேன். வெளியில் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தேன். கடினமான சூழ்நிலை. வேறு என்ன செய்வது? சொல்லுங்க ஐயா?
                              நான் ராஜூவின் கண்களையேப் பார்த்தேன். வெற்றிலைக் கறை படிந்த பற்கள். பேசப் பேச அவனது கண்களில் ஒரு வித பரவசம்.
                               “ இரவு 12.10 க்கு ஆண் குழந்தை பிறந்தது. வெளியே வந்த நர்சு என்னைப் பார்த்து உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என சிரித்தபடியே சொன்னாள்.
                                   அந்தக் கிழவி என்னிடம் வந்து, “ எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டது. பதுவா தனியாக இருப்பாள். பயந்து கொண்டிருப்பாள். வீட்டிற்குப் போகலாம். நானும் துணியெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும். மறுபடியும் காலையில் இங்கு வந்து விடுகிறேன்.” என்றாள்.
                             நான் எதுவும் பேசவில்லை. அந்தக் கிழவியை பதுவாவின் வீட்டுக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு வண்டியில் உட்கார்ந்தேன். “ மறுபடியும் எங்கே கிளம்பிவிட்டாய். வீட்டிற்கு வா” என்றாள் கிழவி.
                             ” என் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றேன் நான்.
                               “ உன் வீட்டிற்கா? நீ பதுவாவோட சித்தப்பா தானே? பதுவாவின் வீட்டிலிருந்து உன்னை வரச்சொல்லி கடிதம் போட்டார்கள் தானே? உனக்குக் கடிதம் கிடைத்ததா இல்லையா? நீ பதுவாவோட சித்தப்பாவா இல்லையா?” என்று கேள்விகளை அடுக்கினாள் கிழவி.
                              “ இல்லையம்மா.. எனக்கும் பதுவாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் இந்தப் பாதையில் வண்டியை நிறுத்தி இருந்தேன். நீங்கள் தான் கூப்பிட்டீர்கள். உங்க வார்த்தையைத் தட்ட முடியவில்லை. அதனால் தான் வந்தேன். சரி நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
                                மின் கம்பத்தருகே கன்னத்தில் கை வைத்தபடி என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தக் கிழவி. நான் அப்போதே கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தால் 12.30 மணிக்கே வந்திருப்பேன். ஆனால் விதி விடவில்லை.”
                             “ வேறு என்ன பிரச்சினை வந்து சேர்ந்தது?” என்றேன்.
                               அது ஒரு தனி கதை. அந்தப் பாதையில் அரசாங்கத் தோட்டம் இருப்பதால் அந்தப் பாதையில் ரொம்ப நாட்களாக நான் போகாமல் தான் இருந்தேன். அதே பகுதியில்தான் என் சொந்தக்காரர் லக்‌ஷ்மணன் வசித்துவந்தார். அவர் வீட்டு முன் கூட்டமாக இருந்தது. போய்ப் பார்த்தால் அவர் இறந்துவிட்டார். பிணத்தை எடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நான் வண்டியை விட்டு இறங்கினேன். லக்‌ஷ்மணனின் மகன் சுதாமா என்னைப் பார்த்து “ அண்ணா” எனக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டான். நான் மறுபடியும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன்.
                           பிணத்தைத் தூக்க வேண்டும். நானும் தோள் கொடுத்தேன். சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்போது மணி மூன்று ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது பொழுது விடியத் தொடங்கிவிட்டது. அப்புறம் தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து பார்த்தால் எதுவும் மிஞ்சவில்லை. 
                              ராஜூ கீழேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். இவ்வளவு நீண்ட இரவை இப்படித்தான் கடந்து வரவேண்டுமா இவன்?
                               “ முதலாளிக்கு கணக்கு ஒப்படைத்துவிட்டு பார்த்தால் கையில் ஒன்றும் மிச்சமில்லை. சுடுகாட்டில் நூறு ரூபாய் செலவாகிவிட்டது. கைச் செலவுக்குக் காசு எதுவும் இல்லை” என்று முடித்தான் ராஜூ. 
                                அவனது கண்களை நேருக்கு நேராய் என்னால் பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கொண்டேன். 
                                 ராஜூவின் பாதங்களில் குற்றவாளியான கடவுள் துண்டுத் துண்டாக உடைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு.                          

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மலைகளில்....



1.நான் எழுந்து வருவதற்குள்
போய்விட்டது நிலா

எழாமலே
இருந்திருக்கலாம்.


2.நாளை
என்னைப் பூட்டிவிட்டு
சாவியைத் தொலைத்துவிட
தீர்மானித்திருக்கிறேன்
திறப்பதற்கு
முயற்சி செய்யாதீர்கள்


3.ஏறுவதும் இறங்குவதும்
நான்தான்
வெறுமனே நகர்த்தலுக்குத்தான்
இந்தக் காய்கள்
யாரோ
பரமபதத்தை விரித்துவைத்து
விளையாடுகிறார்கள்
வெற்றி பற்றி பேச
எந்த உரிமையுமில்லை எனக்கு


4.அவ்வளவு அமைதியாக
இருக்கிறது வானம்
பறவைகள் கூட
கோடு கிழிக்க வரவில்லை
இன்னும் அண்ணாந்தே நிற்கிறேன்
கழுத்து வலிக்கும்வரை நிற்பேன்
பூமியில்தான்
எத்தனை சத்தங்கள்


5.முகவரி விசாரிப்பவனின்
இருள் நிறைந்த கண்களில்
பட்டுவிட்டேன் நான்
நல்லவேளையாக
என்னைத் தான்
விசாரித்தான் அவன்
தெரியாது எனச்சொல்லிவிட்டேன்
நானும்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அப்பா

                                     அப்பா
ஓரியமொழி மூலம்:கௌர்ஹரி தாஸ்
இந்தியில்:மஹேந்திர ஷர்மா
தமிழில்:நாணற்காடன்
         வீட்டிற்கு வந்ததும் வாந்தி வருவதுபோலிருந்தது சஞ்சய்க்கு. தனது குடும்பத்தை அன்போடும், மரியாதையோடும் பார்க்க முயற்சி செய்தாலும், அழுக்கும், துர்நாற்றமும் அவனது கண், காது, மூக்குகளைப் பொத்திவிடுவதாகத்தான் இருக்கின்றது அந்த வீடு. வீடு முழுக்க இல்லாமையும், இயலாமையும் தான் குடியிருக்கின்றன. இவற்றிற்கு நடுவில் அவனது இருப்பு அற்பமானதாகவே இருக்கிறது. மனசுக்குள் எரிந்து குமைகிறான்.
                  எல்லாவற்றிற்கும் அப்பா தான் காரணம் என்பதே அவனது எண்ணம். குழந்தைகளை நன்றாக வளர்க்க துப்பில்லாதவர்கள் ஏன் பெற்றுப்போடுகிறார்கள்? மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள என்ன தேவை இருக்கிறது? இந்தக் கேள்விகளையே சஞ்சய் தன் அப்பாவின் மேல் வீசிக்கொண்டிருக்கிறான்.
                    சஞ்சய் பட்டப்படிப்பு முடித்தவன். கல்லூரிப் படிப்பு முடித்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த வேலையும் கிடைத்தபாடில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. எங்கே போனாலும் சிபாரிசு வேண்டியிருக்கிறது, இல்லையென்றால் இலஞ்சம் தரவேண்டும். அவனைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற விஷ்வகல்யாணுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது. காரணம், அவனது அப்பா கல்வித்துறையில் துணைச் செயலாளராக இருக்கிறார். நரேஷுக்கும் வரதட்சணையாக வேலை வாங்கிக் கொடுத்துவிட்டனர். ஆனால், சஞ்சயின் அப்பாவோ அவ்வளவு பெயர் பெற்றவரோ, நாலு பேரை தெரிந்து வைத்திருப்பவரோ, அல்லது ஐம்பது அறுபதாயிரம் இலஞ்சம் கொடுக்குமளவுக்குப் பணக்காரரோ கிடையாது.
   பகல் ஓடி முடித்ததும் இரவில் விண்மீன்களை எண்ணிக்கொண்டிருப்பதுதான் சஞ்சயின் வாழ்க்கையாக இருக்கிறது. தனது சாதாரணமான கனவுகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாததாகத்தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது அவனுக்கு.
                 சில மாதங்களுக்கு முன் கோபிநாத் கூட எம் எல் ஏ வைப் போய்ப் பார்க்க யோசனை தெரிவித்தான் சஞ்சய்க்கு. அவனும் கூட போய்ப் பார்க்கத் தயாராகத் தான் இருந்தான். ஆனால் ஒரு நாள் கோபிநாத் ”எம் எல் ஏ வைப் பார்ப்பதால் எந்த நன்மையுமில்லை. ஏனெனில், உன் அப்பா எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்.” என்று கூறி விட்டான்.
                        அப்போதும் கூட சஞ்சய்க்கு தன் அப்பா மேல் தான் கோபம் வந்தது. படுக்கையில் விழுந்து கிடக்கும் அவரோ,”காந்தியின் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக முடியுமா என்ன?” என்றார்.
                        ”ஏன் முடியாது? நமக்கு நல்லது செய்கிற கட்சியில் சேர்வதுதான் சரியானது. பாரம்பரியமான கட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். காற்று வீசும் பக்கம் படகைச் செலுத்துவது தான் புத்திசாலித்தனம்”
                           அப்பாவோ புரிந்து கொள்ளவே இல்லை. சஞ்சய் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவுமில்லை. எம் எல் ஏ வைப் போய்ப் பார்க்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
       அவன் வெளியேப் பார்த்தான். வெயில் மட்டுப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். அப்பாவுக்கு இரவு உணவு கொடுத்துவிட்டு வரவேண்டும். ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்கிறார் சஞ்சயின் அப்பா. அவரைப் பார்க்கும்போது அவ்வப்போது இரக்கம் வந்தாலும், பெரும்பாலும் கோபம் தான் வரும் சஞ்சய்க்கு. அப்போதெல்லாம் அவன்”இவரைப்போன்ற மனிதர்கள் ஏன் இந்த உலகத்திற்குப் பிறந்து வருகிறார்கள்” என நினைத்துக் கொள்வான்.
                         அம்மா, அப்பாவும் இரு தங்கைகளும் சஞ்சய்யின் கால்களில் சங்கிலிபோல் பிணைந்து இருக்கிறார்கள். அந்த நிகழ்வுக்குப்பின் சஞ்சயால் வீதியில் தலை நிமிர்ந்து போகமுடியவில்லை. மடியில் குழந்தையைச் சுமந்துகொண்டு, காதலித்தவனின் வீட்டு முன் போராட்டம் செய்த தங்கையால் அண்ணனின் மானத்தை காப்பாற்ற முடியுமா என்ன? சுசீலா இதைத் தான் செய்தாள். தான் செய்த தவற்றுக்கு அச்சாரமாக கர்ப்பிணியாகி கல்யாணம் ஆகாமலேயே தாயாகி விட்டாள் அவள். அம்மா கூட கருவைக் கலைக்கச் சொன்னாள். சுசீலாவோ அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பிறகு இன்னொரு தங்கையின் திருமணத்தை நடத்துவதென்பது சஞ்சய்க்கு இயலாத காரியமாகிவிட்டது. இதற்கும் தன் அப்பா தான் பொறுப்பு எனக்கருதினான் சஞ்சய்.
                      இல்லாமை, இயலாமை, அவமானம் இவற்றால் நிரம்பிக்கிடக்கும் வீட்டை விட்டு எங்கேயாவது ஓடி விடலாம் என்றாலும் முடிகிறதா என்ன? எல்லாச் சிக்கல்களும் அவனது காலில் சங்கிலிபோல் பிணைந்து கிடக்கின்றன. வீட்டில் நான்கு ஜீவன்கள். ஆஸ்பத்திரிப் படுக்கையில் தீராத நோயோடு போராடும் அப்பா. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு எப்படி போய்விட முடியும் அவனால்? ஊர்க்காரர்கள் என்ன பேசுவார்கள்? அம்மாவையும், திருமணத்திற்கு நின்று கொண்டிருக்கும் தங்கையையும் விட்டுவிட்டு சுயநலத்தோடு ஓடி விட்டவன் என்று தானே சொல்லும்.
          ஒரு வேலை கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் தான். கல்லூரியில் படிக்கும் போது படித்து முடித்ததும் ஏதோவொரு வேலை கிடைத்துவிடும் என்று தான் நம்பினான். ஆனால் அந்த நம்பிக்கை வெறும் கனவாக ஆகிவிட்டது இன்று. நாள் முழுக்க சும்மாவே உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. யாரிடமும் முகத்தைக் காட்டக்கூட முடிவதில்லை. இப்படி வாழ்வதை விட செத்துவிடலாம். 
                       தன் அப்பாவுக்கு புற்றுநோய் என்று கேள்விப்பட்டதும் சஞ்சய்க்கு தலை சுற்றியது. இன்னும் அதிக நாட்கள் தன் அப்பா வாழ மாட்டார் என்பதை சஞ்சய்ப் புரிந்து கொண்டான். வெயிலிலும், மழையிலும் தலைக்கு மேலிருந்து காத்துக்கொண்டிருந்த குடை அவனைவிட்டு நழுவிப் போகத் தொடங்கிவிட்டது இப்போது. அவன் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவனின் அப்பாவின் முகத்தைப் பார்த்தான். கருணை நிரம்பி, பற்றற்று கிடந்தது அது. சஞ்சயின் கையைப் பிடித்து,” என்ன நோய் என்று அம்மாவிடமும், தங்கச்சிகளிடமும் சொல்லிவிடாதே” என்று சொன்னார். சஞ்சயும் சரி என்று தலையாட்டினான்.
                     மருத்துவரும், “ ரொம்பவும் கால தாமதம் ஆகிவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டியதுதான். இன்னும் நான்கைந்து மாதங்கள் தான்”. என்று சொன்னார்.
                            நெருப்பு போன்ற நோயின் அணுக்கள் அவனின் அப்பாவின் உடம்புக்குள்  விளையாட ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. அந்த அணுக்கள் அவரின் ரத்த அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பலஹீனப் படுத்திக்கொண்டு வருகிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.
                                சஞ்சய் இரவும், பகலும் தன் அப்பாவின் பக்கத்திலேயே இருந்தான். வேலை எதுவுமில்லாத அவனது வறண்ட வாழ்வில் அப்பாவுக்குச் செய்யும் சிகிச்சை ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னும் நான்கைந்து மாதங்கள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு விருந்தாளியாக தன் தந்தையைக் கருதிக்கொண்டான் அவன். அதன் பிறகு அவர் இருக்கப்போவதில்லை.
                              மருத்துவர்கள் சொன்ன ஓரிரு வாக்கியங்கள்தான் இப்போது அவனது நினைவில் வந்து வந்து போகின்றன. தொழிற்சாலை விதிப்படி ஓய்வுபெறும் முன்பே ஒரு தொழிலாளி இறக்க நேரிட்டால் அந்த வேலை அந்தத் தொழிலாளியின் மகனுக்குக் கிடைக்கும் என்பது தான் அது. அந்த வேலை கிடைத்தால் சஞ்சய்க்கு தன் அம்மா, தங்கைகளைக் காப்பாற்ற போதுமானதாக இருக்கும். அப்பாவைப் பற்றிக் கவலைப்படாமல்  அந்த வேலைக்காகத் தன்னை ஆயத்தப்படுத்தினான் சஞ்சய்.  
                             சஞ்சய்க்கு அன்று நம்பிக்கையின் புதிய கிரகணக்கீற்று தென்பட்டது. அன்றிலிருந்து அப்பா மேல் அவனுக்கிருந்த தவறான எண்ணம் மேலும் அதிகமாகிவிட்டது. அவனுக்குள்ளிருந்த தவறான எண்ணத்தை அப்பாவும் தெரிந்து விட்டதாகவே இவன் கருதிக்கொண்டான். அவருக்கு வயது 57 ஐ ஆகிவிட்டது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே 60 ஆகிவிடும். 
                      அப்பா அவனைக் கூப்பிட்டு, “இரண்டு தங்கச்சிகளையும் நீ வெறுத்து விடாதே. சுசீலா நல்ல பெண். நல்ல பெண்கள்தான் ஏமாற்றப்படுகிறார்கள். வயசான அம்மாவை கைவிட்டுவிடாதே. உன்னைத்தவிர இவர்களுக்கு இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார்.
      அப்பாவின் நனைந்த இமைகளுக்கு முன் இந்த பூமி மங்கிக்கொண்டிருந்தது. ஏதாவது பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில், “ கவலைப் படாதீர்கள் அப்பா, நான் இருக்கிறேன்” என்றான் சஞ்சய்.
                                 இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மருத்துவர், “ வாழனுங்கற ஆச உங்க அப்பாவுக்கு ரொம்ப அதிகமாக இருக்கு. அது தான் அவரை இன்னும் வாழ வச்சிக்கிட்டு இருக்கு. மருந்து மாத்திரையெல்லாம் காரணமில்லை. இல்லையின்னா இந்த நெலைமையில இவ்வளவு நாள் வாழ்றது ரொம்ப சிரமம்.” என்றார்.
                            முதல்முறையாக சஞ்சய் சந்தோசப்பட்டான். அப்பாவின் மன உறுதியை நினைத்துப் பெருமைப்பட்டான். ஆனால் தொழிற்சாலை விதிமுறையை நினைத்து அவன் கவலைப்படத் தொடங்கினான். பொங்கி வழிந்த நம்பிக்கையின் மீது இப்போது இருள் சூழத் தொடங்கியது. சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட தன் வாழ்க்கையைக் காப்பாற்ற இனி எந்த வழியும் இல்லை என நினைத்துக் கொண்டான்.
                             இப்படியே படுக்கையில் கிடந்து இன்னும் சில நாட்கள் உயிரோடு இருந்துவிட்டால் விதிமுறைப்படி வேலை கிடைக்காமலே போய்விடும். ஓய்வு பெறுவதற்கு முன்பே தந்தை இறந்துவிட்டால் தான் மகனுக்கு வேலை கிடைக்கும் என்பது தான் விதி. ஓய்வு பெற்றுவிட்ட பிறகு ஒரு தொழிலாளி இறந்தால் இந்த விதி செல்லாது.
                                சஞ்சய் தன் தந்தையைப் பார்க்கிறான். வாழ்ந்து முடித்துவிட்ட பெருமிதம் தளும்பும் முகம். உட்காரவும், எழவும் கூட முடியாமல் சிரமப் படுகிறார். எந்த வேலையும் செய்யமுடியாது. வேலைக்கும் போக முடியாது. சேர்த்துவைத்த பணம் யாவும் சிகிச்சைக்கே செலவாகிவிட்டது.  பி.எஃப் பணமும் போய்விட்டது. அம்மாவின் நகைகளும் கரைந்துவிட்டன. கைக்குமேல் ஒன்றரை இலட்சம் ரூபாய் கடனாகிவிட்டது.  இந்த நிலையில் அவர் இன்னும் இரண்டு மாதங்கள் உயிரோடு இருந்து அதன்பிறகு இறந்தால் சஞ்சயும் மற்றவர்களும் பாதிப் பிணமாகி விடுவார்கள். கடன் கழுத்தை நெறித்துவிடும்.
                           வேலையும் கிடைக்காமல் போய்விடும். வீட்டையும் விற்கவேண்டியதாகிவிடும். அப்பாவின் தாமதமாகும் மரணம் சஞ்சயின் முன்னால் ஒரு பூதத்தைப் போல் நின்று கொண்டிருந்தது.
                                 சிக்கல்கள் சூழ்ந்த வாழ்க்கை. இந்த இரண்டரை வருடமாக வீட்டில் சாப்பாட்டிலிருந்து எல்லா விசயங்களும் மாறிவிட்டன. சிரிப்பில்லை, சந்தோசமில்லை, பண்டிகை, விழாக்கள் எதுவுமில்லை. இந்த இரண்டரை ஆண்டுகளாக சுடுகாட்டின் கருணை நிரம்பிய பார்வையால்  சஞ்சயின் வீடு மூடப்பட்டிருக்கிறது. சிரிப்பும், உற்சாகமும் இல்லாத இந்த வீடு ஒரு புற்றுநோய்க்காரனின் மரணத்தை மட்டுமே எதிர்பார்த்திருக்கிறது.
                            நிகழ்காலத்தைவிட எதிர்காலம் மிகவும் பயங்கரமாக சஞ்சய்க்கு முன்னால் நின்று கொண்டிருந்தது. அவன் மட்டும் என்னதான் செய்வான்? எங்கே ஓடுவான்? தற்கொலை செய்துகொண்டாலாவது இந்தச் சூழலிலிருந்து தப்பித்துக்கொள்ள  முடியுமா? வீட்டை மறந்துவிட்டு வேறேங்காவது போய் வாழ்ந்துவிடத்தான் முடியுமா?
                            இந்த கவலைகளுக்கு நடுவே ஆறுதலாக கல்லூரி நாட்களின் ஞாபகம் வந்தது. கூடவே கல்யாணியுடனான காதல். கல்யாணி இப்போது டெலிபோன் எஸ் டீ ஓ வின் மனைவி.  இதற்குக் காரணமாக அவன் கல்யாணி மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. கல்யாணி யதார்த்தம் அறிந்த பெண். கனவுகளுக்காக வாழ்வது அர்த்தமற்றது என நம்புபவள்.
                            சீக்கிரமாக அப்பா இறந்துவிட்டால் பரவாயில்லை. இந்த இரண்டு வாரத்திற்குள் அப்பா இறந்துவிட்டால் தொழிற்சாலையில் சஞ்சய்க்கு வேலை கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் வராது. வேலை கிடைத்துவிட்டால் கடனெல்லாம் அடைத்துவிடலாம். அப்பாவின் அஸ்தியையும் காசியில் கரைத்துவிடலாம். அம்மாவை ரயிலில் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பிவைக்கலாம். சுசீலாவை ஏமாற்றியவனின் மேல் வழக்கு தொடுக்கலாம். சின்ன தங்கையையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விடலாம். அப்பாவின் கனவுகளையெல்லாம் பூர்த்தி செய்த பிறகு தன் மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கும் ஒரு கனவை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
                           ஆனால் அப்பா இறப்பதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள் அவரை இறக்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். அப்பா அதிக நாட்கள் வாழவேண்டுமென்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சஞ்சயோ சீக்கிரம் அவர் செத்துவிட வேண்டுமென விரும்பினான். இந்த இழுபறி சஞ்சய்க்கும் மருத்துவர்களுக்கும் இடையே மனப்போராட்டமாக நடக்கிறது.
                             இந்த இழுபறியில் சஞ்சய் உடல் மெலிந்து போனான். புற்றுநோய் நோயாளியை இவ்வளவு நாள் உயிரோடு வைத்திருப்பதை நினைத்து மருத்துவர்கள் பெருமிதம் கொண்டனர்.
                            இருவரின் குறிக்கோளும் ஒன்றுதான் என்பதை நினைத்து சஞ்சய் திடுக்கிட்டான். அப்பாவை சாகடிக்க ஏதேனும் சூழ்ச்சியை இந்த மருத்துவர்கள் செய்கிறார்களோ? இல்லை இல்லை.. அவர்கள் அப்பாவைக் கொல்ல முயலவில்லை. ஆனால் அவர்களால் அவரைக் காப்பாற்றிவிட முடியாது.
                        புராணத்தில் யயாதி தன் மகன் புருவிடம் வாழ்க்கையும், இளைமையும் வேண்டினானாம். முதுமையில் தள்ளாடிய யயாதி வாழும் ஆசையில் தன் மகனிடம் இளைமையை வேண்டி நின்றிருக்கிறான் எனும்போது, சாகும் தறுவாயிலிருக்கும் அப்பா ஒரு சில மாதங்களை இன்னும் வாழ்வதற்கு கேட்பதில் என்ன தவறு இருக்கும்?
                                  சஞ்சய் ஒரு நாளில் இரண்டு முறை மருத்துவரைச் சந்தித்து வந்தான். ஆனால் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் திரும்பிவிடுவான்.
                             ஒருநாள் மருந்து வாங்கவும், ரேசன் வாங்கவும் காசில்லை. என்ன மனிதன் இவர்? தானும் சாகாமல், மற்றவர்களையும் வாழவிடாமல் என்று அப்பாவின் மேல் கோபம் வந்தது சஞ்சய்க்கு. கை விரல்களை மூடி அவரை ஓங்கி ஒரு குத்து விடலாமா என்று கூட யோசித்தான்.
                                  இனி யோசிக்க ஒன்றுமில்லை. தனியாக எதுவும் செய்துவிடமுடியாது. இந்த விசயத்தில் மருத்துவர்கள்தான் உதவ முடியும். ஏதேனும் ஊசி போட்டு அப்பாவை நிரந்தர இருளுக்குள் தள்ளுவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. அப்பாவுக்கும் இந்தத் துன்பமான வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் சிகிச்சை செலவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் கேவலமான நிலையிலிருந்தும் விடுதலை.
                                     ஆனால் இந்த விசயத்தை மருத்துவர்களிடம் சொல்ல முடியவில்லை அவனால். போவான். பெஞ்சு மேல் உட்காருவான். நோயாளிகள், நர்சுகளின் நடமாட்டம் குறையும்வரைக் காத்திருப்பான். பிறகு திரும்பிவிடுவான்.
                                 அவனைப் பார்க்க மருத்துவருக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது.  என்னாலான எல்லா முயற்சிகளும் செய்கிறேன். மீதி கடவுளின் கையில்தான் உள்ளது என்றார் மருத்துவர்.
                              ”போதும் டாக்டர்.. இனிமேல் இவரைப் பிழைக்க வைக்க எந்த முயற்சியும் செய்யாதீர்கள். இனி இவர் உயிரோடு இருந்தால் நாங்கள் எல்லோரும் சாக வேண்டியது தான்.” என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டால் என்ன? என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் சொல்ல முடிவதில்லை.
                                     ஆஸ்பத்திரியின் நாலாப்புறமும் நிழல் பரவியிருந்தது.  சஞ்சய் சைக்கிளை உருட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி வறாண்டாவுக்குள் நுழைந்தான். சைக்கிளை நிறுத்திவிட்டு பெஞ்சில் அமர்ந்தான். நீளமான எட்டு வைத்து மருத்துவர் தன் அறைக்குள் நுழைந்தார்.
                                    நோயாளிகள் மாறி மாறி உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தனர். சஞ்சய் மருத்துவரைத் தனிமையில் சந்திப்பதற்காகக் காத்திருந்தான். கொசுக்கள் மொய்க்கத்தொடங்கின. இரவு எட்டுமணிக்கு அறை காலியானது. அவன் மருத்துவரின், மேசை அருகில் போய் நின்று கொண்டான். தலை தூக்கிப் பார்த்தான்.
                                     “ கொஞ்சம் பேசவேண்டும் டாக்டர்” என்றான் சஞ்சய்.
                                     “ அப்பா......” என்று இழுத்தார் அவர்.
                                    “ நான் எல்லா முயற்சிகளும் செய்து கொண்டு இருக்கிறேன். நேற்றை விட இன்று அவரின் உடல்நிலை கொஞ்சம் தேறி இருக்கிறது.” என்றார் அவர்.
                                  “ இல்லை இல்லை.. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர் முழுமையாக குணமடைந்து விடுவாரா என்ன?” என்றான் சஞ்சய்.
                                 “  முழுமையாக குணமடையும் வாய்ப்பு கண்டிப்பாக இல்லை” என்றார் மருத்துவர்.
                               “ அப்படியென்றால் இன்னும் எத்தனை நாட்களுக்கு?”
                              “ எப்படி சொல்வது? இரண்டு மூன்று மாதங்கள் தான் இருப்பார் என நான் நினைத்தேன். ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மாதிரி நோயாளிகள் அதிகபட்சமாக ஆயிரம் நாட்கள் வாழ்வார்கள். கணக்குப்படி பார்த்தால் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன.” என்றார் மருத்துவர்.
                            “ ஆனால் ரொம்ப தாமதமாகி விட்டது” என்றான் சஞ்சய்.
                 “ தாமதமா? என்ன தாமதம்” என்று உரத்த குரலில் கேட்டார் மருத்துவர்.
                         சஞ்சயால் பதில் எதுவும் பேசமுடியவில்லை. மருத்துவர் அவனருகில் வந்து தோளில் கையைப் போட்டவாறு, “ உன் குடும்ப சூழ்நிலை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் துக்கப்பட்டு என்ன ஆகப்போகிறது. மனிதன் சூழ்நிலைக் கைதி. நீ உன் அப்பாவுக்காக முடிந்த அளவு செய்துவிட்டாய். இனி உன் கையில் எதுவுமில்லை.”
                             சஞ்சய் எதுவும் பேச முடியாமல் வீடு திரும்பினான். அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். சுசீலா தன் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தாள். சின்னவள் இவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். “ சாப்பாடு எடுத்து வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு தூங்கு. எனக்குத் தூக்கம் வருகிறது” என்றாள் அவள்.
                              விரக்தியோடு தலை முடியைக் கோதிவிட்டான் சஞ்சய். சாப்பிடப் பிடிக்கவில்லை. எப்பப் பார்த்தாலும் இந்தக் காய்ந்த ரொட்டியும், ஆறிய குழம்பும் தான். இதைத் தவிர வேறெதையும் சுவைத்துப் பார்க்க அவனது நாக்குக்குக் கொடுத்து வைக்கவில்லை.
                             இரவின் ஆயுள் நீண்டு கிடந்தது. நிலாவை ஒரு துண்டு மேகம் மறைத்துக் கொண்டிருந்தது. சாக்கடை நாற்றம் வந்துகொண்டிருந்தது. எங்கும் அழுக்குத் துணிகள், கிழிந்த போர்வைகள், உடைந்த மாடம், பரவிக்கிடக்கும் இருள் என அவனைச் சுற்றிலும் இரவு மிக அழுத்தமாய் இருந்தது. கவிஞர்கள் ஸ்வீட் ஹோம் என்று சொல்வது இதைத்தானா?
                           என்ன ஆனாலும் சரி.   நாளை மருத்துவரிடம் எல்லாக் கஷ்டத்தையும் சொல்லிவிடுவது என்ற முடிவுக்கு வந்தான் சஞ்சய். என் அப்பாவுக்கு விடுதலை கொடுங்கள் எனச் சொல்லிவிட வேண்டும். வெளிநாடுகளில் பலர் செத்துப்போக விருப்பம் தெரிவித்து வழக்கு தொடுக்கிறார்கள் இல்லையா? அது போல என் அப்பாவும் சாகத்தான் விரும்புகிறார். நானும், என் குடும்பத்தாரும் கூட இதைத் தான் விரும்புகிறோம். யோசித்தபடியே தூங்கிப் போனான்.
                             அவன் இவற்றைச் சொல்வதற்கு முன்பே மருத்துவர் முகம் சஞ்சலமாகத்தான் இருந்தது. அதன் பிறகு, “ நானும் இதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நீ வருத்தப்படுவாய் என பயந்து தான் சொல்லாமல் இருந்தேன். உண்மையில் உன் அப்பாவின் உடல்நிலை மோசமாகத் தான் இருக்கிறது. சரியாகத் தூங்க முடியாமலும், பேச முடியாமலும் சிரமப் படுகிறார். இன்னும் சில மாதங்கள் அவர் உயிரோடு இருந்தால் உனக்கு வேலை கிடைப்பதும் சிக்கலாகிவிடும்” என்றார் மருத்துவர்.
                              பிறகு இருவரும் அப்பாவின் படுக்கையருகே சென்றனர். அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். மருத்துவர்  அப்பாவின் வலது கையில் ஊசி போட்டார். மெல்ல மெல்ல அப்பா குளிரத் தொடங்கினார். பிறகு இருவரும் அவரின் முகத்தை வெள்ளைத் துணியால் மூடினர்.
                             ஒரு வெயில் கீற்று சஞ்சயின் முகத்தில் பட்டது. அவன் எழுந்து பார்த்தான். பாதித் திறந்த கதவின் வழியாக காலை வெயில் அவன் மேல் விழுந்து கொண்டிருந்தது. இங்கும் அங்கும் பார்த்தான். மருத்துவர் எங்கே? அப்பா எங்கே? ஆஸ்பத்திரி எங்கே? இல்லையில்லை.. எல்லாம் கனவு..
                       எழுந்து கிணற்றடிக்குச் சென்றான். அம்மா ஒரு வாடிய பாகற்கொடியை பந்தலில் ஏற்றி விட்டுக்கொண்டிருந்தாள். அந்தச் செடியில் எறும்புகள் வரிசை வரிசையாக ஏறிக்கொண்டிருந்தன. அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றினாள்.
                             ”இனி மேல் இந்தச் செடி காய் தரப்போவதில்லை. பிறகு ஏனம்மா அதைப் பந்தலில் ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டான் சஞ்சய்.
                            “ இவ்வளவு நாளாக காய் கொடுத்ததில்லையா? உனக்கு வறுத்த பாகற்காய் பிடிக்குமென்று உன் அப்பா வருசம் ஒரு பாகற்செடியை நட்டு வைப்பார். ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரும்போது பாகற்செடி இல்லையென்றால் ரொம்பவும் வருத்தப்படுவார் அவர்” என்றாள் அம்மா.
                             சஞ்சயின் தலைமேல் பாறாங்கல்லைப் போட்டது போல் இருந்தது. சிறுவனாக இருந்தபோது அவனுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்ததும், அப்பா அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு சென்றது ஞாபகத்திற்கு வந்தது. அம்மா விரதமிருந்து மாட்டுச் சாணத்தில் நெளிந்து கொண்டிருந்த புழுவைப் பிடித்துச் சாப்பிட்டாள். குப்தேஷ்வர் கோயில் குகைக்குள் சென்று அப்பா விரதமிருந்தார். அந்தக் கோயிலின் நாற்பது படிகளிலும் மேலிருந்து கீழே உருண்டுகொண்டே வந்து நேர்த்திக்கடன் தீர்த்தார். உடம்பெல்லாம் காயமானது. அவருடைய இந்த விரதத்தினால் தான் சஞ்சயின் உடம்பு சரியாகி இருக்கும் போல.
                        சஞ்சயின் கைகள் வியர்வையால் நனைந்துவிட்டன. அப்பாவைப் பற்றிய நல்ல நல்ல விசயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வரத்தொடங்கின.
                         பி ஏ விண்ணப்பம் நிரம்பும் சமயத்திலிருந்த அவரது முகம் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவர் வீட்டுக்குத் திரும்பும்போது விரலில் மோதிரம் இருக்கவில்லை. அது அவருக்கு வரதட்சணையாக வந்தது. ரொம்ப நாள் கழித்துத் தான் பி ஏ வுக்கு பணம் கட்ட அவர் மோதிரத்தை விற்று விட்டார் என்ற விசயமே சஞ்சய்க்கு தெரிந்தது.
                                      “ பிறந்ததிலிருந்தே உன் அப்பாவை கஷ்டங்களும் கவலைகளும் விட்டு விலகவே இல்லை. அவங்க அப்பா அம்மா பல வருசம் ஆஸ்பத்திரியில் இருந்து உயிரை விட்டார்கள். அவங்களுக்கு மருத்துவச் செலவு செய்தே பெரும் பொருளை இழந்தோம். அப்புறம் மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைத்தோம். அப்புறம் நீங்க மூன்று பேர். இந்த வேலையில் கிடைக்கிற பணத்தைக் கொண்டு தான் எல்லாமே.. என்ன செய்வது? உங்க அப்பா சொல்வார்- யாரை எங்கே பிறக்க வைக்க வேண்டுமென கடவுளுக்குத் தெரியும். யார் வாழ்வில் வெற்றி பெற்றார்கள் தோற்றார்கள் என்பதை கடவுள் ஆய்வு செய்வார். கடமையைச் செய்வது மட்டுமே மனிதனின் வேலை. பலன் கடவுளின் கையில் தான் உள்ளது” என்று முடித்தாள் அம்மா.
                         சஞ்சய் ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினான். அவன் கண்களுக்குள் அப்பாவின் பழைய முகம் நிழலாடியது. சிறுவயதில் தோள்மீது உட்கார வைத்துக்கொண்டு அப்பா அவனை திருவிழாவிற்கு அழைத்துப் போவார். கேட்ட உடனேயே அவனுக்குப் பிடித்த இனிப்புகளும், பொம்மைகளும் வாங்கித் தருவார். அப்படிப்பட்ட அப்பா செத்துப் போகட்டுமென எப்படி யோசனை வந்தது?  வாடிய பாகற்கொடி பந்தலைப் பற்றிக்கொண்டு காற்றில் நடனமிடுவது அவனது கண்களுக்கு முன்னால் தெரிந்தது. ஒரு சாதாரண கொடியை நினைத்து அம்மாவின் மனசுக்குள் எத்தனை வலி? அப்பா செத்துப்போகட்டும் என நினைக்கும் கொடூரமானவனாக நான் ஆகிவிட்டேனே.  இல்லை.. இனி அப்பாவைக் காப்பாற்றுவதற்காக போராடுவேன். உயிரோடு இருக்கும் வரை அவரை அன்போடும் பரிவோடும் பார்த்துக்கொள்வேன் இனி. வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி.
                  அவன் ஓடினான். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்ததும் அப்பாவின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும், நர்ஸுகளும் நின்றிருப்பதைப் பார்த்தான். மருத்துவர் சஞ்சயைப் பார்த்ததும் அவனருகே வந்தார். அவனது முதுகில் தட்டிக்கொடுத்தவாறே,” எதுவும் செய்யமுடியவில்லை” என்றார் துக்கத்தோடு.
                       படுக்கையில் அப்பா படுத்திருந்தார். அவர் தானாக சாகவில்லை. நான் தான் அவரைக் கொன்று விட்டேன் என்று எண்ணினான் சஞ்சய். அப்பாவின் உடலிலும், முகத்திலும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்தது. சஞ்சயின் கனவில் கண்ட பிணத்தைப் போலவே படுத்திருந்தார் அப்பா.
                        
                                
                          

வியாழன், 19 ஜூலை, 2012

திஸ்தா நதி

             திஸ்தா நதி
வங்காள மூலம்: புத்ததேவ் குஹா
இந்தியில்: சுனிதா சௌரஸியா
இந்தியிலிருந்து தமிழில்: நாணற்காடன்

      ஃப்ளாட்பாரத்திலிருந்து வெளியே வந்ததுமே அந்தக் காலை நேர வெயிலில், வேகமான காற்றில் யோகேனுக்கு திஸ்தா நதியின் வெள்ளத்தைப்போல் பல விஷயங்கள் நினைவுக்கு வரத்தொடங்கின. 
             யோகேனுக்கு எப்போதுமே கிராமம் பிடித்தமானதே இல்லை. இவ்வளவு நாட்களுக்குப்பின் அவனுக்கு திஸ்தா நதிக்கரைக்கு மீண்டும் திரும்பி வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இருந்ததையெல்லாம் திஸ்தா நதிதான் ஒரேயடியாக விழுங்கிவிட்டதே!
           இருந்ததெல்லாம் நெல் விளையும் நிலம் கொஞ்சமும், அவனுடைய அண்ணனும் மட்டும்தான். அவனின் அண்ணன் பெயர் நகேன். நகேன் படிக்காதவன். அவன் நகரத்தின் பக்கமே போனதில்லை. விவசாயத்தைத் தவிர வேறு ஒன்றும் அவனுக்குத் தெரியாது. வெயிலோ, மழையோ கிழிந்த ஒரு குடையை ஏந்திக்கொண்டு  வயலைச் சுற்றிச்சுற்றி வருவான். நகேன் படிக்காதவன் தான். நகரத்தையே பார்த்திராதவன் தான். ஆனால், அவனது தயவால்தான் யோகேன் பி.ஏ., முடித்து, நகரத்தில் ஓர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அப்பா, அம்மா இல்லாத நிலையில் அண்ணனாகிய நகேன் தம்பி யோகேனைப் படிக்கவைத்து மனிதனாக்கினான்.
              தான் மனிதனானதை நினைக்கும்போதெல்லாம் நகேனுக்கு சிரிப்பு தான் வரும். அவன் படித்த பல்கலைக்கழகம் அவன்மேல் படித்தவன் என்ற முத்திரையைக் குத்தி அனுப்பிவைத்து விட்டது. அவ்வளவுதான். அந்த முத்திரையின் உதவியோடு தனது ஏழைமை என்ற பாவத்தைக் கழுவிக்கொண்டிருந்தான் அவன்.
                 நகேன் உயிரோடு இல்லாததுதான், இன்று அவனை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. திஸ்தா நதியில் வெள்ளம் வந்த வெகு நாட்களுக்குப்பிறகு, யோகேனின் மெஸ் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.
                 ப்ரியமுள்ள யோகேன்......
                 தீராத துக்கத்துடன் ஆரம்பிக்கிறேன். உன் அண்ணன் நகேன் இப்போது உயிரோடு இல்லை. எனது நடுப் பையன் ஸ்வப்ன வும் இல்லை. இருவரும் ராக்‌ஷஷி திஸ்தாவின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் எல்லோரும் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. இப்படி வாழ்வதை விட செத்துப்போயிருக்கலாம் எல்லாரும்.
                  மேலும் உங்கள் வீடு இடிந்து விழுந்துவிட்டது. நிலமும் மணல் நிரம்பி, சேறு மூடி கிடக்கிறது. முடிந்தவரை சீக்கிரமாக ஒரு முறை இங்கே வர முயற்சி செய்யவும்.

                                                                                                      இப்படிக்கு
                                                                                                உன் சித்தப்பா   ஹாரு  
                  பல முறை முயற்சி செய்தும் வரவே முடியவில்லை. பலமுறை யோசித்தான், போய் மட்டும் என்ன செய்வது? அண்ணனும் இல்லை, வீடும் இல்லை, வேறு எதைப் பார்க்கப் போவது? இருந்தாலும் ஏதோ ஓர் ஈர்ப்பினால் வெள்ளத்தின் பாதிப்புகள் ஓய்ந்தபின் கடன் வாங்கிக்கொண்டு பிறப்பிடம் நோக்கிக் கிளம்பினான்.
....................................................................................................................................................................
                   நாட்கள் உருண்டுவிட்டன. இத்தனை நாட்களுக்குப்பிறகும் கூட காற்றில் அழுகிய நாற்றம் பரவிக்கிடக்கிறது. அழுகிய நீரிலிருந்தும், கழுகுகளின் அழுகிய இறக்கைகளிலிருந்தும் வருகிறது இந்த துர்நாற்றம். ஏறக்குறைய ஐந்து மைல் தூரம் நடந்துவந்து கிராமத்திற்குள் நுழைந்த யோகேனுக்கு கிஞ்சித்தும் அடையாளமே தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் தூசும், தும்புமாகவே கிடந்தன. வீடுகள் இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமலிருந்தன. ஹாரு சித்தப்பாவின் இரண்டடுக்கு மாடி வீடுகூட தென்படவில்லை. மாடுகளின் கழுத்து மணி ஓசை, மரங்களின் நிழல், கன்றுகளின் கூக்குரல், புறாக்களின் சத்தம் என எதுவுமில்லை. பெருகி ஓடும்
மாலைக்காற்று சுடுகாட்டு வழியாக கடந்து போகிறது. காற்று நதியோடு கிசுகிசுத்துப் பேசுகிறது. மணல் புழுதி எழுவதும், அடங்குவதுமாக இருக்கிறது.
                        இந்த வறண்ட பூமியில் தூரத்தில் சில வீடுகளைப் பார்த்தான் யோகேன். அவை பாய்களைக்கொண்டும், இலை தழைகளைக் கொண்டும் வேயப்பட்டிருந்தன. 
                              பெரிய அரசமரமும் இன்னும் சில மரங்களும் வீழ்ந்துவிடாமல் தப்பித்திருந்தன. வீழ்ந்துவிடாத சில சின்ன மரங்கள் சேற்றின் நனைந்து விகாரமாகக் காட்சியளித்தன.
                       ஊர்த்தலைவர் குர்ஷித்தின் வீடிருந்த இடத்தில் மொட்டைப் பனை மரத்தின் கீழே யாரோ குடிசை கட்டி கடைபோல ஒன்றைத் திறந்து வைத்திருந்தனர். பீடி, தீப்பெட்டி, அரிசிப்பொரி, சில காய்ந்த உருளைக்கிழங்கு, பழைய கத்தரிக்காய்கள், பிஸ்கோத்துகள் மற்றும் சில ஈக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன அந்தக் கடையில்.
                      ஒருவன் சாக்குப்பையை உடம்பில் போர்த்திக்கொண்டு மிகுந்த நம்பிக்கையோடு இடது காதை சுத்தம் செய்துகொண்டிருந்தான். யோகேனுக்கருகில் வந்து கேட்டான் - ‘ எங்கே போக வேண்டும்? யார் நீ?’. யோகேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வேறு யாருமில்லை, ஹாரு சித்தப்பாவின் அண்ணன் தாரு சித்தப்பா தான் அவர். கற்பனை கூட செய்ய முடியவில்லை. எப்போது பார்த்தாலும், ஹாரு சித்தப்பாவும், தாரு சித்தப்பாவும் சதுரங்கம் ஆடிக்கொண்டு, ஹுக்கா குடித்துக்கொண்டு இருப்பார்கள். இருவரும் வட்டி வியாபாரம் தான் செய்து வந்தனர். கிராமத்தின் மக்கள்தொகை மிகக் குறைவு தான். இந்த மக்கள் இன்ப, துன்பங்களையும், மான மரியாதையையும் இவர்களிடம் தான் அடகுக்கு வைப்பார்கள். இந்த இருவரும் இந்த மக்களின் இன்ப துன்பங்களைப் பாதுகாத்து வந்தவர்கள். இன்றோ இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது.
                     யோகேன் குழந்தைப்பருவத்துப் பழக்கப்படி தனது செருப்புகளைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டான். இதைப்பார்த்து சித்தப்பா தாரு சிரித்தபடியேச் சொன்னார்- ‘கீழே போடு அதை. மரியாதை காட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பசிக்குதா? ஏதாச்சும் சாப்பிடுறியா?’
                        யோகேன் ’வேண்டாம்’ என்றான். ‘சரி..போ’ என்றார் தாரு.
                        யோகேன் இரண்டு தப்படி நடந்துவிட்டு அப்படியே நின்றுவிட்டான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டான்,’எங்கே போவது? போவதற்கு எந்த இடம் இருக்கிறது”
                       தாரு எழுந்து நின்றார். இடுப்பை நேராக வைத்து நிற்பது சிரமமாக இருந்தது அவருக்கு. தாழ்ந்த குரலில் பேசினார், ‘நகேன் இப்போது இல்லைதான். ஆனால் எல்லாரும் செத்துவிட்டார்களா என்ன? நேராக போ..அரசமரத்தடியில் ஹாரு இருப்பார்’ என்றார் தாரு சித்தப்பா.
                       யோகேன் சற்று நேர யோசிப்பிற்குப்பின் நடக்கத்தொடங்கினான். புழுதி கிளம்பும், விஷமேறிய காற்று வீசும், அந்த கிராமத்தின் நடுவே நின்றிருக்கும் அரசமரத்தடிக்குச் சென்று சேர்ந்தான்.
                       அவனது தலைக்கு மேல் ஒரு சாதகப் பறவை பீ பீ எனக் கத்திக்கொண்டு அவனையேச் சுற்றி சுற்றி வந்தது. யோகேன் தலையைத் தூக்கி பற்களை நறநறவெனக் கடித்தபடி,’திஸ்தா நதியில் தான் நிறைய தண்ணீர் இருக்கிறதே..அங்கே போய்க் குடிக்க வேண்டியதுதானே’ என்று கடிந்துகொண்டான்.
...................................................................................................................................................................
                        யோகேன் வெகுநேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சூரியன் உதயமாகி வெகுநேரம் கழித்துதான் விழிப்பு தட்டியது அவனுக்கு. நேற்று மாலை பறவைகள் அனைத்துமே செத்துவிட்டதாக தோன்றி இருந்தது அவனுக்கு. ஆனால் இன்று காலையில் தான் எல்லாப் பறவைகளும் செத்துவிடவில்லை என்பதை அவன் உணர்ந்தான். காலை நேர வெயில் அரச மர இலைகளில் மின்னிக்கொண்டிருந்தன. மரக்கிளைகளில் சில மைனாக்கள் அமர்ந்திருந்தன.
                       யோகேன் சித்தப்பா ஹாருவுடன் அரசமரத்தடியில் நெருப்பருகே அமர்ந்தபடி எல்லா விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். ஹாரு திஸ்தாவில் வந்த வெள்ளத்தைப்பற்றியும் அதன் கொடூரமுகம் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். தாடியால் நிரம்பிய அவரது முகம் நெருப்பு ஜ்வாலையில் பார்ப்பதற்கு துறவியின் முகம் போல் தோற்றமளித்தது. ‘யோகேன்.. நாங்கள் மறுபடியும் ஒரு முறை சரணாகதி அடைந்துவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டாயா?’ என்றார் ஹாரு.
                          யோகேன் பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். பூனி சூடான சோற்றுக் கஞ்சியில் உப்பு கலந்து யோகேனுக்கு ஒரு டம்ளர் கொடுத்தாள். பூனியை இதற்கு முன் ஒரேவொரு முறை பார்த்திருக்கிறான். அந்த நாட்களில் ஹாரு சித்தப்பா வீட்டுப் பெண்கள் அவ்வளவு எளிதாகத் தென்படமாட்டார்கள். எப்போதாவது, கிராமத்து திருவிழாக்களில் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும். அந்த நாட்களில், மணற்பாங்கான நதிக்கரை பூக்கும் புற்கள் நிறைந்த வனத்திலிருந்து வருகின்ற காற்று, புறாக்களின் முணுமுணுப்பு, காட்டிலிருந்து வருகின்ற மயிலின் அகவல் என சத்தங்களால் நிறைந்திருக்கும். திஸ்தா நதியின் மேற்பக்கம் நேபாள இடையர்களின் மாட்டுக்கொட்டாய்கள் தென்படும்.
                         பூனி -’ யோகேன், ஒரு நாள் நாம் நீந்தி அக்கரைக்குப் போகலாம். போகலாமில்லையா? உங்களுக்கு பயம் இல்லைதானே? ’ என்று சொன்னாள்.    
                  யோகேன் சிரித்தவாறே,’ உன்னைப்போல் பலஹீனமான பெண்ணால் திஸ்தாவை நீந்திக் கடப்பது முடியாத காரியம். கொஞ்ச தூரம் போனதுமே நீ பயந்து செத்துவிடுவாய்.’ என்றான். பதிலைக்கேடு பூனியும் சிரித்துவிட்டாள். ‘நான் திஸ்தா நதியில் அடித்துச் செல்லப்பட்டால் உங்களை இறுக்கிக் கட்டிக்கொண்டு உங்களையும் இழுத்துச் சென்றுவிடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்’ என்றாள் பூனி.
                    யோகேன் எதுவும் பேசாமலிருந்தான்.
              வறுத்த அரிசியும், சில இனிப்புகளும் சாப்பிட்டு காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டான் யோகேன்.
                     கிராமத்தின் சிறியவர்களும், பெரியவர்களும் தத்தமது நிலத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக ஈடுபடத் தொடங்கினர். ஒன்பது மணிக்கெல்லாம் கிராமத்தின் நாலாப்புறமும் வேலையை உற்சாகத்துடன் ஆரம்பித்தனர். எங்கும் உற்சாக ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உற்சாகத்தை யோகேன் இதற்கு முன் பார்த்ததேயில்லை. யோகேன் எல்லோருடைய முகத்திலும், கண்களிலும் வாழ்வின் மீதான நம்பிக்கை மின்னிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். சோம்பேறி மனிதர்களான இவர்கள், அன்னநடை போடும் இவர்கள், விதியை நம்பி சோம்பித் திரியும் இவர்கள் தங்களுக்குள் இப்படியொரு நெருப்பை மறைத்து வைத்திருந்ததைக் கற்பனை கூட செய்யமுடியாமல் வியந்து நின்றான் யோகேன்.
                  தீருதாஸ் மண்வெட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு ஓடிவந்தான். ‘என்ன ஆனது மாமா’ என்றான் யோகேன்.
                            தீருதாஸ் திரும்பி-’ ஓ வந்துவிட்டாயா..சரி வேலையை ஆரம்பி..நீயும் ஒரு விவசாயியின் மகன் தானே. இந்த திஸ்தா எங்களைத் தோற்கடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி நடக்க விடமாட்டோம் நாங்கள்.’என்றான்.
                         யோகேன் ,’அரசாங்கம் எதுவும் செய்யவில்லையா?’என்று கேட்டான்.
                        ஹாருவின் கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான்,’ அரசாங்கம் செய்யும்போது செய்யும். அதுவரை நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? எங்களுக்கு கை கால் இல்லையா என்ன? திஸ்தா நதி அதையுமா அடித்துச் சென்றுவிட்டது?”
                         மதியம் ஹாருவுடன் எல்லோரும் திரும்பி வந்தனர். மரத்திற்கு கீழே அமர்ந்து முலாம் பூசிய தட்டுகளில் சோறு, வறுத்த கத்தரிக்காய், உப்பு, வெங்காயம் வைத்துக்கொண்டு சாப்பிட்டனர்.
                          யோகேனும் சாப்பிட்டான். நேற்றிலிருந்து பார்த்த யாவும் அவனை மௌனமாக்கிவிட்டது. அழுது வடியும் கண்களோடுதான் கிராம மக்கள் இருப்பார்கள் என்று தான் அவன் நினைத்திருந்தான். ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகுதான் இந்த மக்களின் கண்களில் கண்ணீரே இல்லை என்பதை உணர்ந்தான். இருப்பதெல்லாம் நெருப்பு மட்டுமே.
                  சாப்பிட்டு முடித்தபின் ஹாரு பூனியைக் கூப்பிட்டு,'சாப்பிட்டிருந்தால் யோகேனை அழைத்து வா’ என்று சொன்னார்.
                 அறுபது வயதான ஹாரு தன் குழுவினரோடு மறுபடியும் கனத்த வெயிலில் நுழைந்தார். யோகேன் கொஞ்சநேரம் மரத்தடியில் குளுமையான நிழலில் உட்கார்ந்திருந்தான். பூனி குடிசைக்குள்ளிருந்து வந்து,’ வாங்க, போகலாம்’ என்றாள்.
                      எழுந்தவாறே ’எங்கே’ என்று கேட்டான் யோகேன்.
                      ’வேறு எங்கே..நம்ம வீட்டுக்குத்தான்’ என்று க்ளுக்கென சிரித்தாள் பூனி.
                இருவரும் சப்தமேதுமற்ற மதிய நேரத்தில் புழுதி கிளம்பும் காற்றோடு நடக்கத் தொடங்கினர்.
                  சிறிது நேரத்திற்குப் பின் பூனி சொன்னாள்,’உங்கள் அண்ணன் நகேன் என்னைக் காதலித்தார்’
                  ’தெரியும்’ என்றான் யோகேன்.
                 வேறெதுவும் சொல்லவில்லை. இதயத்தில் ஒரு வேதனைக் கீற்று ஓடியது.
                கொஞ்ச நேரம் நடந்த பிறகு இருவரும் யோகேனுடைய வீட்டருகே வந்து சேர்ந்தனர். அந்த இடம் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் தெரியத் தொடங்கியது. சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
                      ’கடுமையான வெயில். நான் இங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து கொள்கிறேன்’ என்றாள் பூனி. ‘சரி..உட்கார்’’ என்றான் யோகேன்.
                      பார்வையை ஓட விட்டான். அழகான முற்றம் இல்லை. கொட்டிக்கிடக்கும் இரவுப்பூக்கள் இல்லை. துளசி மாடம் இல்லை. வறாண்டா இல்லை. கிழக்குப் பக்கத்து அறை இல்லை. எல்லாம் அழிந்துவிட்டிருந்தது. பெரிய வீடு இருந்ததற்கான அடையாளமே துளி கூட இல்லை. சமையலறை மேற்கூரை சேற்றில் சிக்கி ஏதோ விமானத்தின் இறக்கை போல் நின்றிருந்தது. முருங்கைமரத்திற்கு எதுவும் ஆகவில்லை. அதன் இலைகள் பசுமை பூத்திருந்தன. பூனி அந்த மரத்தினருகே அமர்ந்துகொண்டாள்.
                       ’என்ன யோசிக்கிறீர்கள்’ என்றகேள்வி கேட்டு அமைதியை உடைத்தாள் பூனி. ‘ஒன்றுமில்லை’ என்றான் யோகேன்.
                       ‘ ஒன்றுமில்லையென்றால் என்ன அர்த்தம்? எல்லா மனிதர்களும் மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார்கள். நீங்கள் வெறுமனே பெருமூச்சு மட்டுமே விட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா?’ என்றாள் பூனி.
                         யோகேன் சிரித்தான்.’அப்படியில்லை.. இதையெல்லாம் நான் யாருக்காக செய்வது? யார் இருக்கிறார்கள் எனக்கு?” என்று கேட்டான் யோகேன்.     
                        பூனி தனது பெரிய கண்களால் யோகேனைப் பார்த்து,’ ஆமாம், சரியாகச் சொன்னீர்கள்..சரி விடுங்கள்..என்னால் ஏதாவது செய்ய முடிகிறதா எனப் பார்க்கிறேன்.’ என்றாள். ‘இரு,இரு.. இந்த வெயிலில் மண்வெட்டியை எடுக்க வேண்டாம்’ என்றான் யோகேன்.
                             பூனி சிரித்தபடி ‘நான் உருகிப்போய்விடுவேனா என்ன? பயப்படாதீர்கள். என்னால் எதுவும் செய்யமுடியும்.’ என்றாள்.
                             சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
                          எங்கிருந்தோ ஒரு ஆந்தை ஜோடி வந்தது. அவை யோகேன் வீட்டு முற்றம் இருந்த இடத்தில் தானியங்களைத் தேடுவதுபோல் பாவனை செய்தன.
                  பூனி சொன்னாள்,’ஆந்தைகள்’. யோகேன் , ‘இவை ஏன் ஜோடியாகவே வசிக்கின்றன’ என்று கேட்டான்.
                 ‘எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?’ என்றாள் பூனி. ‘எனக்கும் தெரியாது’ என்று சொல்லிவிட்டு எழுந்தான் யோகேன்.
                திஸ்தா நதி மறுபடியும் ஒருமுறை திரும்பி வருவதாக கற்பனை செய்து பார்த்தான் யோகேன்.
                 மட்டுப்பட்ட வெயிலில், நீரோடும் சத்தத்தைக் கேட்டவாறு இருவரும் திஸ்தா நதிக்கரையில் நின்றிருந்தனர். இத்தனை துக்கத்திற்கு நடுவிலும், யோகேனுக்கு யாவுமே இனிமையாகத் தெரிந்தது. ‘நதியைக் கடந்து செல்கிறாயா?’ எனக் கேட்டான் யோகேன்.
                   பூனி குழந்தையைப்போல வேகமாகத் தலையை ஆட்டி ஆட்டி , ‘இல்லை இல்லை’ என்று சொன்னாள். அவளது கண்களில் இரு துளி முத்துகள் மின்னின. திஸ்தா நதியின் கர்ஜனைக்கு காது கொடுத்த யோகேன், மறுகரையிலிருந்த வைகுண்டபுரியின் அடர்ந்த காடுகளை இமைக்காமல் பார்த்தான். திஸ்தா அவனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது. ஆனாலும், திடீரென அவனுக்கு திஸ்தா நதி மிக அழகாகத் தோற்றமளித்தது இப்போது. நன்றியுணர்வோடு மனசுக்குள்ளேயே அவன் திஸ்தா நதிக்கு வணக்கம் சொன்னான்.
                 யோகேனுடைய முகத்தில் புன்னகை ரேகை பரவத்தொடங்கியது. திஸ்தா நதி எல்லாவற்றையும் அழித்துவிட்டு, மீண்டும் இந்த மக்கள் புதிய வாழ்வை வாழ வாய்ப்பை வழங்கி இருக்கிறது என அவன் நினைத்தான்,
                  யோகேனை ஆச்சர்யமாகப் பார்த்த பூனி, ‘என்ன ஆனது? நதியைப் பார்த்து என்ன யோசிக்கிறீங்க.. பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?’ என்றாள்.
                      யோகேன் பூனியைத் திரும்பிப் பார்க்காமல், நதியைப் பார்த்தபடியே, ‘இல்லையில்லை..எதுவும் யோசிக்கவில்லை.. சரி போகலாம் வா’ என்று அழைத்தான் அவளை.
                     மணற்பரப்பு நிறைந்த பாதையில் இருவரும் உரசியபடி அரசமரத்தடி நோக்கி நடந்தனர். பின்னால் திஸ்தா நதியின் கர்ஜனை மெலிதாகிக்கொண்டிருந்தது. பூனியின் உடலிலிருந்து வியர்வை வாசனை வந்துகொண்டிருந்தது.
                      வியர்வைத்துளிகளின் வாசனை இவ்வளவு அருமையானதா, இதற்கு முன் இந்த வாசனையை யோகேன் அனுபவித்ததில்லை.
                         நடக்க நடக்க யோகேனின் உடலில் தசைநார்கள் திடீரென இறுகத் தொடங்கின. எந்த நம்பிக்கையில் இந்த தசைநார்கள் இறுகிப்புடைக்கின்றன என்பது தெரியவில்லை.
                  நீண்ட காலமாக பேனாவை உருட்டி உருட்டி அவனது கைகள் களைத்து விட்டிருந்தன. அவன் புத்தகத்தை மனப்பாடம் செய்து பி.ஏ. வை முடித்தவன். ஒரு பெரிய அலுவலகத்தில் இயந்திரத்தைப்போல காலையும் மாலையும் அச்சடித்த காகிதங்களில் எழுதி எழுதி நாட்களைக் கடத்திவந்தவன். நரம்புகள் புடைக்கும் கைகளால் அவனால் யாவுமே செய்ய முடியும். மண்வெட்டுவது, ஏர் ஓட்டுவது,  பூனி போல் வியர்வையின் வாசனையில் மூழ்கிக்கிடப்பது, துக்கத்தைக் கண்களில் தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் பெண்களை இதயத்தால் வருடி குளிரச்செய்வது-என எல்லாமும் முடியும் அவனால். தனது முயற்சியால், தனது உழைப்பால், தனது வியர்வையை பெருகி ஓடச்செய்து தன் கண்களுக்கு முன் புதிய உலகத்தை உருவாக்கிப் பார்க்க வேண்டும். இவை யாவற்றையும் யோகேன் திடீரென உணரத் தொடங்கினான்.
                   இந்த விரிந்த ஆகாயத்தின் கீழ் திஸ்தா நதியின் கர்ஜனையோடு கைத்தட்டிக்கொண்டு ஆட வேண்டுமென்ற ஆசை எழுந்தது அவனுக்கு. இந்த சந்தோசத்தில் அவன் கொஞ்ச தூரம் ஓடவும் செய்தான்.
                      ‘என்ன ஆனது? நில்லுங்கள்..ஓடாதீர்கள்..பசிக்கிறதா..ஆனால் கைவசம் சாப்பிட எதுவுமில்லை’ என்றெல்லாம் பூனி சத்தமிட்டாள்.
                       இதைக்கேட்டு யோகேன் நின்று விட்டான்.
                        வெகுதூரம்வரை வறண்ட பூமி விரிந்து கிடந்தது. யோகேனின் கண்கள் எரியத் தொடங்கின. இந்த வறண்ட பூமியை மறுபடியும் பசுமையாக்கிப் பார்க்க வேண்டுமென அவன் மனசுக்குள் முடிவெடுத்தான். பூஞ்செடிகள், நிழல் தரும் மரங்கள் நட வேண்டும். கன்றுக்குட்டிகளை நடனமாட வைக்க வேண்டும். புறாக்களை அழைத்து வர வேண்டும். எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
                      வியர்வையில் நனைந்திருந்த பூனியின் உள்ளங்கைக்குள் தனது கையை வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அவளது கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். அவனது நீல நிறச் சட்டையும், பூனியின் கறுப்பு நிறச் சேலையும், பூக்கும் புற்கள் காற்றில் அசைந்தாடுவதைப் போல் திஸ்தா நதியிலிருந்து வந்த காற்றில்அலையாடின.
                       அவர்களது தலைக்கு மேல் ஜோடிப்புறாக்கள் சிறகடித்தவாறு திஸ்தா நதியை நோக்கி பறந்து சென்றன.
                

       

புதன், 18 ஜூலை, 2012

தனிமையின் பாதம்

என் ஆள்காட்டி விரல்பற்றி
பனிவெடிப்புகள் காணாத பாதங்களை  முன்வைத்து 
நடை பயில்கிறது தனிமை

எவ்வளவுதான் உதறினாலும்
விட்டுவிலகாமல்
தேள் கொட்டிய வலியாய்
விரலைக் கவ்விக்கொண்டு
குழந்தையின் குதூகலத்தைச் சுமந்தபடி
தளிர் நடையிடுகிறது அது

எதிர்ப்படும் யாவரும்
நான் தந்தைமைக் கண்டுவிட்டதாக
கருதிவிடுவார்களோ
என்ற பதற்றத்தைத் தணிக்க
பாதைகளற்ற
வீதிகளைத் தேடியலைகிறேன்

இப்போதெல்லாம்
பலூன்கள் நிறைந்த வீதிகளைக்
கடந்து செல்லமுடியாமல் திரும்புதல்
பழக்கமாகி வருகிறது

என்னை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வதெனத் தெரியாமல்தான்
இன்னும் வெட்டாமலிருக்கிறேன்
எனதிந்த ஆள்காட்டி விரலை


செவ்வாய், 10 ஜூலை, 2012

நீயும், குடையும்

1. குடையைப்
பிடித்திருக்கிறாய் நீ

குடைக்குப்
பிடித்திருக்கிறது
உன்னை

2. மழையிலா?
வெக்கையிலா?
எப்போது விரிப்பாய்
உனது கைப்பைக்குள்
இருக்கும் குடையை

3. மடக்கி வைத்த
குடையின் கைப்பிடியில்
ஒட்டியிருக்கும்
உள்ளங்கை ரேகைகள்
உனது இறுக்கத்தைக்
காட்டுகின்றன

4. கண்களிடமிருந்து தப்பித்து
உனது தலைக்குமேல்
கம்பீரமாய் நிற்கிறது
குடை

பார்வையிலிருந்து தப்பமுடியாமல்
உனது பாதங்களில் விழுந்துகிடக்கிறது
அதன் நிழல்

5. பூப்போட்ட

அந்தச் சின்னக் குடைதான்
மழை ஊசிகள்
உன்னைக் குத்திவிடாமல்
காப்பாற்றுகிறது









நீயும், நத்தையும்

1. இந்த ஓராயிரம் மலைகளில்
கடைசி மலையின் உச்சியில்
நீ இருக்கிறாய்
என்பதறியாத நத்தையொன்று
உன்னைத்தேடி
முதல் மலையில்
ஊர்ந்தபடி
ஏறத்தொடங்கியுள்ளது

2. விரல்களால் முத்தமிடுவாயென
உணர்வுக்கொம்புகளை
நீட்டிக்கொண்டிருக்கிறது
மருதாணிச்செடியில்
ஒரு நத்தை

இலை பறித்துக்கொண்டிருக்கும்
உனது பத்து உதடுகளும்
சிவக்கப்போகிறது
சற்று நேரத்தில்

3. உன்னெதிரே
ஊர்ந்து வருகிற நத்தையைப் பார்க்க
தலைகுனிந்து
வெட்கத்தைத்
துணைக்கு அழைத்துக்கொள்கிறாய்

4. சூரியக் கதிர் சுடும்போதெல்லாம்
உனது நினைவுக் கூட்டுக்குள்
சுருண்டு கொள்கிறது
அந்த நத்தை

5. குடிப்பெயர்ச்சியாகி
போகிறாய் நீ
வேறு வீட்டிற்கு

இடப்பெயர்ச்சியாகி
போகிறது நத்தை
அதே கூட்டோடு

திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், கடிகாரமும்

1. உன்னை மையப்புள்ளியாகக் கொண்டு
முட்களை முடுக்கிவிட்டிருக்கிறது
கடிகாரம்
முட்களின் முனைகள்
காலமாகிக்கொண்டிருக்கின்றன

2. மணி பார்ப்பதாய்ச்சொல்லி
அடிக்கடி மணிக்கட்டில்
பார்த்துக்கொள்கிறாய்
உனக்காகவே துடித்துக்கொண்டிருக்கும்
இன்னொரு இதயத்தை

3. ஓடாமல்
மௌனமாய் நின்றிருக்கிறது
கடிகாரம்

உனது விரல்களுக்கு
எந்த நொடியில்
கற்றுத் தரப்போகிறாய்
கடிகாரத்தை முடுக்கிவிட

4. நீ இறந்த காலமா
எதிர்காலமா
என்றறியாத கடிகாரமொன்று
முட்களைச் சுழற்றிக்கொண்டிருக்கிறது
நிகழ்காலத்தைக் காட்டிகொண்டு

5. நீ கொடுத்த
முட்களைக் கொண்டுதான்
மணிகாட்டிக்கொண்டிருக்கிறது
கடிகாரம்

நீயும், பலூனும்

1.கையில் பலூனோடு
திருவிழாவையே
வாங்கி விட்ட
மகிழ்ச்சியோடு செல்கிறாய்

2. தளர்ந்துகிடந்த பலூன்
நீ ஊத ஊத
விரிந்து விரிந்து
இறுகிக்கொள்கிறது

3. உன் பிரிவின்
கோடைக்காலமிது

வெப்பத்தால்
காற்று விரிவடையுமென்பது
தெரியுமா உனக்கு?

4. வெடித்துவிடுமென்ற அச்சத்தில்
கையிலேயே வைத்திருக்கிறாய்
பலூனை

ஊதுவாயென நம்பி
உனது உதடுகளையேப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
அது

5. உனது நுரையீரல் தீண்டிய
காற்றைச் சுமந்தபடி
உயரமாகிக்கொண்டிருக்கிறது
நீ நழுவ விட்ட
பலூனொன்று

நீயும், வயலும்

1. உனது கண்கள் நாற்று நட்ட
வயலின் விளைச்சலைச் சேமிக்க
பத்தாயம் இருக்கிறதா
உன்னிடம்?

2. ஆழ உழுதன
உனது பார்வைகள்

நீர் பாய்ச்சின
உனது கண்கள்

விதை தூவின
உனது உதடுகள்

களை பறித்தன
உனது கைகள்

வயலானது
நிலம்

3. உனது காலடிச் சத்தம் கேட்டு
வளைக்குள் பதுங்கிக் கொள்கின்ற
அந்த நண்டுச் சொற்கள்
நீ திரும்பிப்போனபின்
வயல் முழுக்க
ஊர்ந்து விளையாடுகின்றன

4. கறுப்பும் வெளுப்புமாய்
உனது முகத்தில்
எப்போதுமிருக்கின்ற
அவ்விரு ஆடுகளைக்கொண்டே
நலம் விசாரிக்கிறாய்
இந்தப் பசுமையான வயலை

5. நீ துரத்தி வந்த தும்பி
நீர்தேங்கிய வயல் மேல்
பறக்கிறது இப்போது

உனது கால்கள் தயங்கி நிற்க
உடைந்து சிதறமுடியாத வருத்தத்தில்
உறைந்து கிடக்கிறது
வயல் நீரில் வானம்

நீயும், மரமும்

1. எப்போதாவது
நிழல் தேடுவாயென
உனது பாதையில்
வெகு நாட்களாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
ஒரு மரம்

2. உனது கரிவளியை
வாங்கிக்கொண்டு
தனது உயிர்வளியை
வழங்கிக்கொண்டிருக்கிறது
மரம்

3. உனது கண்கள்
வீசியெறிந்த விதை
எல்லாருக்கும் நிழல் தரும்
மரமாகிவிட்டதென்பதை
அறிவாயோ நீ?

4. சாய்ந்தது மரம்

தோள் கொடுத்து
சாய்ந்தாய் நீ
மரத்தின் மீது

உனது தோள் வாங்கி
சாய்ந்தது மரம்

5. கனிந்த பழங்களோடு
காத்திருக்கிறது மரம்

உன் முன்
ஒரே ஒரு ஏணியும்,
ஒரு நூறு கற்களும்

ஏறினாலும்
எறிந்தாலும்
பழத்தோடுதான்
திரும்புவாய் நீ

நீயும், குளமும்

1. நீ பொரிபோட்டு
வளர்த்த மீன்களைப்
பொத்திப் பொத்தி
வளர்க்கிறது குளம்

2. சதுரக்குளத்தின் நடுவே
கல்லெறிகிறாய்

வட்டமாகவேப் பரவுகின்றன
எல்லா அலைகளும்

3. கடைசிப் படிக்கட்டில்
அப்பியிருக்கின்றன
நீ அரைத்துப்பூசிய
மஞ்சளின் துணுக்குகள்

அருகிலிருந்தும்
கலக்க முடியாத தவிப்பில்
அலைகிறது
குளத்து நீர்

4. பசித்த மீன்களுக்கு உணவாய்
உனது முக நிலவு

கூடும் பசியுடன்
குறையாத நிலவோடு
நீள்கிறது இவ்விரவு

5. குளித்து முடித்து
ஏறிச்செல்லும்போது
படிக்கட்டுகளில்
உனது ஈரச்சுவடுகள்

நீ குளத்தை விட்டு
நீங்கியதற்கான
அடையாளங்கள்
அவை

நீயும், புறாவும்

1. உனது கண்கள் வீசும் இரையைக்
கொத்தித் தின்ன
 உனது வாசலில்
காத்திருக்கிறது
ஒரு புறா

2. சிறகுகளிருந்தும்
பறந்து போகாமல்
உன் பாதங்களை
முத்தமிட்டபடி கிடக்கிறது
உன்னால் கவனிக்கப்பட்டு
உன்னால் பராமரிக்கப்பட்டு
உன்னால் வளர்க்கப்பட்ட
புறாவொன்று

3. நீ தொட்டுத் தடவும்பொழுதெல்லாம்
சிலிர்த்துக்கொள்கிற
அந்தப் புறாவிடம் தான்
விசாரிக்க வேண்டியுள்ளது
உனது விரல்களைப் பற்றி

4. இந்தப் புறாவின்
சிறகுகளுக்கு வானம்
அலகுகளுக்கு பூமி
இளைப்பாறுதலுக்கு மரம்
இருப்பதற்கு
உனது புறாக்கூண்டு

5. உனது காலடிச்சத்தம் கேட்டும்
பறக்காமலிருக்கிறது
ஒரு புறா

பறக்காமலிருப்பதைப் பார்த்தும்
பிடிக்காமலிருக்கிறாய்

நீயதை