திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், எறும்பும்

1. குளித்த பின்
ஈரத்தலையோடு வருகிறாய்

தரையில் சொட்டிய
ஒரு துளியில்
முகம் பார்க்கிறது
ஓர் எறும்பு

2. பனிக்கால இரவில்
உன் உள்ளங்கைச் சூட்டில்
குளிர் காய்ந்து  கொள்கிறது
அந்த எறும்பு

3.அண்ணாந்து பார்த்தும்
உன் முகம் பார்க்க முடியாத
ஏமாற்றத்தில்
இறக்கை வளர்க்கிறது
அது

4. அரிசி மாவில் நீயிட்ட
கோலத்திற்காக வருகின்றன
ஏராளமான எறும்புகள்

கோலமிடும்
உன் கோலத்தைக் காண
காத்திருக்கிறது
ஒற்றை எறும்பு

5. பூங்காவில்
சறுக்கல் விளையாடுகின்றன
குழந்தைகள்

புல்வெளியில் அமர்ந்து
ஊன்றியிருந்த
உன் கைவிரல்களில்
ஏறிச் சறுக்கி விளையாடுகிறது
ஒரு எறும்பு

கருத்துகள் இல்லை: