திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், மரமும்

1. எப்போதாவது
நிழல் தேடுவாயென
உனது பாதையில்
வெகு நாட்களாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
ஒரு மரம்

2. உனது கரிவளியை
வாங்கிக்கொண்டு
தனது உயிர்வளியை
வழங்கிக்கொண்டிருக்கிறது
மரம்

3. உனது கண்கள்
வீசியெறிந்த விதை
எல்லாருக்கும் நிழல் தரும்
மரமாகிவிட்டதென்பதை
அறிவாயோ நீ?

4. சாய்ந்தது மரம்

தோள் கொடுத்து
சாய்ந்தாய் நீ
மரத்தின் மீது

உனது தோள் வாங்கி
சாய்ந்தது மரம்

5. கனிந்த பழங்களோடு
காத்திருக்கிறது மரம்

உன் முன்
ஒரே ஒரு ஏணியும்,
ஒரு நூறு கற்களும்

ஏறினாலும்
எறிந்தாலும்
பழத்தோடுதான்
திரும்புவாய் நீ

கருத்துகள் இல்லை: