ஞாயிறு, 9 மார்ச், 2014

குளிரின் மரணம்

()()()()() குளிரின் மரணம் ()()()()()

ஏ.ஸி ரிப்பேர் செய்பவனாக
இன்றைய நாளை
வாழ்ந்து முடித்துவிட்டேன்

குளிர், மழை, பனி பற்றிய
எந்தப் பேச்சும்
இன்றெனக்கு
பெரும் வெக்கையாக இருந்தது

தர்பூசணிப் பழங்கள் அறுத்து
துண்டாடிச் சிவந்த
பகலைக் கண்டு
வெட்கிப்போனேன்

வீதியில் மணியெழுப்பிப் போன
ஐஸ்காரன்
கொல்லப்படாமல்
என்னிடமிருந்து தப்பிப் போனான்

நீ நெருக்கித் தைத்துக் கொடுத்த
ஸ்வெட்டருக்குள்
ஒளிந்திருந்த காதலை
அணிந்துகொள்ள
முடியாமலாயிற்று

குடை விரிக்கும் பதைபதைப்பென
எதுவுமில்லாததையெண்ணி
மிகவும் பதைபதைத்துப் போனேன்

அவ்வளவு எளிதாக
தேநீர் மறுத்து
வியப்பிலாழ்ந்தேன்
என்னை நானே

நெற்றி வழிந்த வியர்வையை
விரல் வழித்து
சுண்டிவிட்டபோது
சில்லிட்டிருந்தது
அந்த அறை

கருத்துகள் இல்லை: