ஞாயிறு, 9 மார்ச், 2014

கவிதை சைக்கிள்

இன்று அதிகாலை பனியினூடே
இமைபிரிக்கும்போது
என் மிதிவண்டியின் பூட்டை
உடைத்துக்கொண்டிருந்தது கவிதை

மறுபடியும் இமைகளை
மூடிக்கொண்டு விழித்திருந்தேன்

களவாடும் அதன் முயற்சிக்கு
இசைந்துகொடுத்து
சின்னச் சின்ன க்றீச்சிடுதலால்
என்னையும் உசுப்பியது மிதிவண்டி

உறங்குவதான எனது நடிப்பு
கவிதைக்குத் துணைசெய்ய
க்ளிங் க்ளிங் என மணியடித்தபடி
மிதிவண்டியை நகர்த்தியது அது

சூரியன் வந்த பிறகு
போர்வை விலக்கி
பற்கள் துலக்கி
முகம் கழுவி
தேநீர் அருந்தி
செய்தித்தாள் வரை
வந்து சேர்ந்தேன்

என் மிதிவண்டியில்
எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டிருக்கும்
அந்தக் கவிதையைப் பற்றி
எந்தச் செய்தியும் இல்லை
இந்தச் செய்தித் தாளில்

கருத்துகள் இல்லை: